ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

சிறுமி பாலியல் வன்கொடுமை: பாதிரியாருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருவனந்தபுரம், பிப்.17 கேரளத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வழக்கில், பாதிரி யாருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தலசேரி போக்ஸோ சட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளியான ராபின் வடக்கன் செரிலுக்கு (51) பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களைப் பாதுகாக்கும் சட்டம் (போக்ஸோ), இந்திய தண்டனையியல் சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளின் கீழ் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.வினோத் சனிக்கிழமை தீர்ப் பளித்தார். இந்த தண்டனையை, அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ராபினுக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதில், பாதித் தொகை, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கப்படும். இதுதவிர, வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதுதொடர்பாக, அரசு தரப்பு வழக் குரைஞர் பீனா கூறியதாவது: கடந்த 2016-இல் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுமியை பாதிரியார் பாலியல் வன்கொடுமை செய்து, கர்ப்பமாக்கினார். 2017-ஆம் ஆண் டில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கூத்துபரம்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அந்தச் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், அந்தக் குழந்தை, வயநாடு மாவட்டத்தில் உள்ள ஓர் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப் பட்டது.
மாவட்ட சிறார் பாதுகாப்பு ஆணை யத்துக்கு வந்த தொலைபேசித் தகவலை அடுத்து, சிறுமி பலாத்கார சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. முதலில், பாலியல் குற்ற சம்பவத்தை மூடி மறைத்ததற்காக, சிறுமியின் தந்தை மீது குற்றம் சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனையின் 2 மருத்துவர்கள், அந்த மருத்துவமனை நிர்வாகி, வயநாடு சமூகநலத் துறையின் முன்னாள் தலைவர் தாமஸ் ஜோசப் தேரகம், அந்தக் குழுவின் உறுப்பினர் பெட்டி ஜோஸ், வயநாடு ஆதரவற்றோர் இல்லத்தின் கண்காணிப்பாளர் ஒபிலியா ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவரம் தெரிந்த பிறகு, காவல் துறைக்கு தெரி விக்காமல், அதை மூடி மறைத்ததற்காக, அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. எனினும், போதிய ஆதாரங்கள் இல் லாததால், அவர்கள் 6 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர் என்று அந்த வழக்குரைஞர் கூறினார்.
-  விடுதலை நாளேடு, 17.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக