வியாழன், 22 ஜனவரி, 2015

பாகிஸ்தானில் ராணுவப் பள்ளிக்குள், தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல்


 10 மணி நேர கடுமையான மோதல்
* 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்


பெஷாவர்: பாகிஸ்தானில் ராணுவப் பள்ளிக்குள், தற்கொலைப்படை தீவிரவாதிகள் நுழைந்து, வகுப்பறைகளில் இருந்த குழந்தைகள் மீது கண்மூடித்தனமாக சுட்டனர். இதில்  140 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 160 பேர் உயிரிழந்தனர். சுமார் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில்  சேர்க்கப்பட்டுள்ளனர். ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த கடும் சண்டை 10 மணி நேரம் நீடித்ததால் பெரும்  பரபரப்பு நிலவியது. பள்ளிக்குச் சென்ற தங்களது குழந்தைகளின் நிலை அறிய பள்ளிக்கு வெளியே திரண்ட பெற்றோரை சமாதானப்படுத்தவும், தடுக்கவும் முடியாமல்  ராணுவத்தினர், போலீசார், பாதுகாப்பு படையினர் திணறினர். பாகிஸ்தான் முழுவதும் 146 ராணுவ பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் ராணுவ அதிகாரிகள்,  வீரர்கள் மற்றும் பொதுமக்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் அனைவரும் 10 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். தாக்குதல் ஆரம்பம்:  இதேபோன்ற ராணுவப் பள்ளி, பெஷாவர் நகரின், வார்சாக் சாலையில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 800 க்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில்,  பள்ளிக்கு அருகேயுள்ள கல்லறைக்குள் பதுங்கியிருந்த, தற்கொலைப்படை தீவிரவாதிகள், கருப்பு உடைகளை அணிந்து, பள்ளிச்சுவரில் ஏறிக் குதித்து நேற்று காலை உள்ளே  நுழைந்தனர். 

இதையடுத்து, அங்கிருந்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் நோக்கி தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். பல தீவிரவாதிகள் ராணுவ  உடையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. வகுப்புக்குள் நுழைந்து வெறியாட்டம்: தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத மாணவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள,  நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும், தீவிரவாதிகளின் துப்பாக்கித் தோட்டாக்கள் பலரது உடலை துளைத்தன. உயிரைக் காக்கும் முயற்சியாக ஏராளமான மாணவர்கள்  வகுப்பறைக்குள் சென்று பதுங்கிக் கொண்டனர். இதையடுத்து, ஒவ்வொரு வகுப்பாக நுழைந்த தீவிரவாதிகள் அங்கிருந்த மாணவர்களை காட்டுமிராண்டித்தனமாக சுட்டனர்.  மாணவர்களை வரிசையாக நிற்கவைத்து சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதில், பலரது உயிர் சம்பவ இடத்திலேயே பிரிந்தது. ரத்த வெள்ளம்: கண்மூடித்தனமாக  தீவிரவாதிகள் சுட்டதில், மாணவர்கள் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். வகுப்பறைகள், பள்ளி வராண்டா என்று எங்கு பார்த்தாலும் ரத்தம் சிதறி கிடந்தது. 

குண்டு காயமடைந்த மாணவர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. பல மாணவர்கள் தரையில் படுத்து உயிர் தப்பியுள்ளனர். தீவிரவாதிகள் வேறு  திசைக்கு சென்றதும் பல மாணவர்கள் வெளியே தப்பி ஓடிவந்துள்ளனர். ராணுவம் முற்றுகை: பள்ளிக்குள் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியது பற்றி தகவல்  கிடைத்ததும் ராணுவத்தினர் விரைந்து வந்து பள்ளியை முற்றுகையிட்டனர். ஹெலிகாப்டரிலும் வானில் வட்டமிட்டபடி கண்காணித்தனர். பள்ளிக்குள் துப்பாக்கியால் சுடும்  சத்தமும், குண்டுகள் வெடித்த சத்தமும் கேட்டதால், தீவிரவாதிகள் எத்தனை பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை.  பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டனர். மருத்துவமனைகளில்...: தாக்குதல் சம்பவத்தை அறிந்த,  ராணுவத்தினர் மீட்பு நடவடிக்கையில் துரிதமாக செயல்பட்டனர். 

25 ஆம்புலன்சுகள் உடனடியாக வரவழைக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் பெஷாவர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இரத்தம் தட்டுப்பாடு  ஏற்பட்டதால், உடனடி சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையே, சம்பவத்தை அறிந்த மாணவர்களின் பெற்றோரும், பள்ளியை முற்றுகையிட்டனர். பிரதமர்  நவாஸ் ஷெரீப், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விரைந்து ராணுவத்தின் நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிட்டார். 

160 பேர் உயிரிழப்பு

தாக்குதல் சம்பவத்தில் சிக்கி 140 மாணவர்கள், ஒரு ஆசிரியர், ராணுவ வீரர் என மொத்தம் 160 பேர் உயிரிழந்தனர். தீவிராவதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, சில  மாணவர்கள், பள்ளியின் பின்புற வாசல் வழியாகச் சென்று உயிர் தப்பினர். சுமார் 100க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் பலரது நிலைமை  கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.  ராணுவத்தினர் நடத்திய பதிலடி தாக்குதலில், 8 தீவிரவாதிகள் சுட்டுக்  கொல்லப்பட்டனர். 

பிணைக் கைதிகள்

பள்ளி ஆடிட்டோரியத்தில் பிரின்சிபால், 20 ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 60 பேரை, தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் என்று, தகவல்கள்  வெளியாகியது. இதனால், பள்ளிக்குள் ஏராளமான தீவிரவாதிகள் நுழைந்திருக்கக்கூடும் என அஞ்சப்பட்டது. தீவிரவாதிகளிடம் இருந்து மாணவர்களை மீட்கும் முயற்சியில்  ராணுவத்தினர் தொடர்ந்து ஈடுபட்டனர்.

பீதியை கிளப்பும் தீவிரவாதிகள் 

ராணுவப் பள்ளி மீதான தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பு பெறுப்பேற்றுள்ளது. இது குறித்து, அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் முகமத் கொராசனி  கூறியதாவது: “ராணுவத்தினர் எங்கள் மீதான தாக்குதலை நிறுத்திக் கொள்ளாதவரை, நாங்கள் ஒவ்வொரு ராணுவ பள்ளிகளையும் குறி வைத்து தாக்குவோம்.  எங்களுடைய 6 வீரர்கள் வெற்றிகரமாக ராணுவப் பள்ளிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களுக்கு நாங்கள் வெளியில் இருந்து ஆலோசனைகளை வழங்கிக்  கொண்டிருந்தோம். நாங்கள் கடுமையான பதிலடியை அரசுக்கு கொடுத்துள்ளோம். 

ராணுவத்தினர் எங்களது குடும்பத்தாரை கொன்று குவிக்கிறார்கள். பெண்களை சித்திரவதை செய்கின்றனர். எனவே  அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டவும் பழிக்கு  பழிவாங்கவும், அவர்களுடைய குழந்தைகள் படிக்கும் பள்ளியை குறி வைத்தோம். மூத்த ராணுவ அதிகாரிகளின் பிள்ளைகளாக இருந்தாலும் கூட, சிறு குழந்தைகளை  கொல்ல வேண்டாம் என எங்களது வீரர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு கொராசனி கூறினார்.  

ஆத்திரமூட்டிய ஆபரேஷன்

தலிபான்களின் கொட்டத்தை அடக்க, பாகிஸ்தான் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து, சர்ப்-இ-அஸ்ப் என்ற ஆபரேஷனை நடத்தி,  தீவிரவாதிகளை வேட்டையாடி வருகிறது.  வடக்கு வஜிரிஸ்தானில் நடந்து வரும் இந்த ஆபரேஷனில், 1,300 தீவிரவாதிகள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். இது, தாலிபான்களுக்கு கடும் ஆத்திரத்தை  ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த ஆபரேஷன் தொடர்ந்து நடைபெற்று வருவதால், ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை  நடத்தியுள்ளனர். போதாக்குறைக்கு, தாலிபான்களின் முக்கிய எதிரியான மலாலாவுக்கு, நோபல் பரிசு வழங்கப்பட்டதும், தலிபான்களை வெறுப்பேற்றி உள்ளது.

நவாஸ் ஷெரீப் சபதம்

தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து, பாகிஸ் தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசியதாவது: இது தேசத்துக்கு ஏற்பட்ட பேரிடர். உயிரிழந்தவர்கள்  அனைவரும் என்னுடைய குழந்தைகள். இந்த இழப்பு, எனக்கு ஏற்பட்டது. பெஷாவர் தாக்குதல் கோழைத்தனமாது. தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில், அரசும்  ராணுவமும் முக்கிய முடிவை எடுக்கும். தீவிராதத்தை ஒழிக்கும் வரையில் நாங்கள் ஓயமாட்டோம். தாக்குதல் நடத்தியதற்கான விளைவுகளை தலிபான்கள் சந்திப்பார்கள்.  அடுத்த 3 நாட்களுக்கு, நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும். இவ்வாறு நவாஸ் ஷெரீப் பேசினார். 

இதேபோன்று, பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் இம்ரான் கான், மதகுரு காதிரி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த இக்கட்டான நேரத் தில் அரசுக்கு  தங்களது முழுஒத்துழைப்பு இருக்கும் என்றும் உறுதி அளித்துள்ளனர்.

அனைத்து கட்சி கூட்டம் 

பாகிஸ்தானுக்கு தாலிபான்கள் பகிரங்க மிரட் டல் விடுத்திருப்பதால், அந்நாட்டில் பதற்றமும் பரபரப்பும் அதிகரித்துள்ளது. நாட்டுக்கு ஏற்பட்டுள்ளள நிலைமையை  சமாளிக்கும் வகையில், அனைத்துக் கட்சி கூட்டத்தை இன்று கூட்டி, முக்கிய முடிவுகளை எடுக்க பிரதமர் நவாஸ் ஷெரீப் திட்டமிட்டுள்ளார். 

இந்தியா கடும் கண்டனம்

தீவிரவாத தாக்குதலு க்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. தீவிரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல் பட்டு, அதனை சமுதாயத்தில்  இருந்து முற்றிலுமாக வேரறுக்க வேண்டும். என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். தாலிபான்களின் தாக்குதல் கோழைத்தனமானது. வார்த்தைகளால் விவரிக்க  முடியாத கொஞ்சம் கூட உணர்வே இல்லாத செயல். இது பள்ளிக் குழந்தைகளான அப்பாவி மக்களின் உயிர்களை பறித்துள்ளது என்று பிரதமர் மோடி கண்டித்துள்ளார்.  உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நான் இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். 

இது கோழைத்தனமான, மனிதத் தன்மையற்ற தாக்குதல். இது தீவிரவாதத்தின் உண்மை முகத்தை காட்டியுள்ளது.“ என்று ட்விட்டரில் கூறியுள்ளார். இதேபோன்று, காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்களும், தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-தினகரன்18.12.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக