திங்கள், 30 நவம்பர், 2015

மாணவி பாலியல் வன்முறை மதபோதகர் கைது



கோத்தகிரி, நவ.30  படிக்க வைப்பதாக அழைத்துச்சென்று, மாணவியை பலாத்காரம் செய்த மதபோதகர், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.நீலகிரி மாவட்டம், குன்னுரைச் சேர்ந்த மதபோதகர் அருள்தாஸ், 40. கோத்தகிரியில் தங்கி, போதனை செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ஏழை ஒருவரின் மகளை படிக்க வைப்பதாக கூறி, மேட்டுப்பாளையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஒரு வாடகை வீட்டில் இரண்டு ஆண்டுகள் தங்க வைத்து படிக்க வைத்துள்ளார். அப்போது, மாணவியை பலமுறை பாலியல் வன்முறை செய்துள்ளார். கொலை மிரட்டல் விடுத்ததால், மாணவி யாரிடமும் சொல்லவில்லை. மகளைப் பார்க்க மேட்டுப்பாளையத்துக்கு சென்ற அவரது தந்தை, மகள் உடல் நலமில்லாமல் இருப்பதை கண்டார். மதபோதகர் அருள்தாசின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து, கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர் அவரது மகளை மீட்டு, பெண்கள் பாதுகாப்பு மய்யத்தில் சேர்த்தனர். விசாரணையில், பாலியல் வன்முறை செய்ததை அருள்தாஸ் ஒப்புக்கொண்டார். ஆக., 28இல் கைது செய்யப்பட்டு, குன்னுர் சிறையில் அடைக்கப்பட்டார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் சங்கர் உத்தரவை அடுத்து, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அருள்தாஸ், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

-விடுதலை,30.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக